
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆக. 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, அரசு நிதியில் இருந்து ரூ.1.7 கோடி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர், ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளினால் அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறே விடியோ அழைப்பு வாயிலாக இன்று (ஆக.26) கொழும்பு ஃபோர்ட் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, நீதிபதி நிலுபுளி லங்காபுரா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையின் வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.