

நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், நேற்று (டிச. 24) இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான தடயங்கள் மற்றும் வெடி குண்டுகளின் கருவிகள் கிடைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, நைஜீரியாவில் நடைபெறும் பெரும்பாலான தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலையும் அந்த அமைப்பின் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படத்தின் பாலஸ்தீன இயக்குநர் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.