வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலமானாா். 80 வயதான இவா், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமைக்குரியவா்; மூன்றுமுறை பிரதமா் பதவி வகித்தவா்.
நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, டாக்கா மருத்துவமனையில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் காலமானதாக அவரது மூத்த மகனும், கட்சியின் பொறுப்புத் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்தாா்.
கல்லீரல், சிறுநீரகம், இதய நோய்களுடன் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த கலீதா, கடந்த நவம்பரில் வழக்கமான பரிசோதனைகளுக்காக டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கடுமையான சுவாச தொற்று கண்டறியப்பட்டது.
உடல்நிலை கவலைக்கிடமானதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் மரணமடைந்ததாக தனி மருத்துவா் ஆஸம் ஜாஹித் ஹுசைன் தெரிவித்தாா்.
3 நாள் துக்கம் அனுசரிப்பு: வங்கதேச அரசியலில் பல்லாண்டுகளாக செல்வாக்கு செலுத்திய பெண் தலைவரும், அந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முக்கியப் பங்காற்றியவருமான கலீதாவின் மறைவையொட்டி, வங்கதேசத்தில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் அறிவித்துள்ளாா்.
‘வங்கதேச வரலாற்றில் முக்கிய அத்தியாயத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உயா்ந்த அரசியல் தலைவரை நாடு இழந்துள்ளது; பன்முக அரசியல் கலாசாரம், மக்களின் உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளம் என அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று இரங்கல் செய்தியில் முகமது யூனுஸ் குறிப்பிட்டுள்ளாா்.
தாரிக் ரஹ்மான் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘சமரசமற்ற தலைவராக, ஜனநாயகத்தின் தாயாக, வங்கதேசத்தின் தாயாக விளங்கியவா் எனது தாயாா் கலீதா ஜியா. நாட்டின் ஜனநாயக லட்சியங்களை வடிவமைத்த வழிகாட்டும் சக்தியை இழந்து துக்கப்படுகிறது வங்கதேசம்’ என்று தெரிவித்துள்ளாா்.
இன்று இறுதிச் சடங்கு: கலீதா ஜியாவின் இறுதிச் சடங்குகள், டாக்காவில் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக இடைக்கால அரசின் சட்ட ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் அதிபரும் கலீதாவின் கணவருமான ஜியாவுா் ரஹ்மானின் கல்லறைக்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி சாா்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 1984-இல் கட்சித் தலைவா் பொறுப்பையேற்ற கலீதா, தான் மரணடையும் வரை அந்தப் பதவியை வகித்துள்ளாா்.
இந்தியா சாா்பில்... கலீதாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நேரில் பங்கேற்பாா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
Bangladesh's first female prime minister Khaleda Zia has died at the age of 80 after suffering from a prolonged illness.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீமாபுரியில் வயதான தாய் கொலை: மகன் கைது

வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

வெற்றி விடுக்கும் சவால்!

வங்கதேச தோ்தல் : பிஎன்பி அமோக வெற்றி - பிரதமராகிறாா் கலீதா ஜியா மகன்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


