

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். 4) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இலங்கையின் புதிய அதிபராகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்றுக்கொண்ட அநுர குமார திசநாயக தலைநகர் கொழும்புவில் அந்நாட்டின் தேசியக்கொடியேற்றி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, சுதந்திர நாள் விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “பொருளாதாரத்தில் இலங்கை தன்னிறைவு பெற்ற நிலையடைய அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் கடந்தாண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களின் பேராதரவுடன் அதிபராகப் பதவியேற்றுள்ள திசநாயக தலைமையிலான அரசு நிர்வாகத்தின்கீழ், இலங்கையின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டெழும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுவது குறிப்பிடத்தக்கது.
அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அதிபர் திசநாயக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து, அவர் கடந்த மாதம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.