உலகமே, சீனத்தில் அடுத்த பேரிடர் தொடங்கிவிட்டதாக அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்கவில்லை என சீனா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில், கடும் காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகளுடன் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருவது தொடர்பாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சீனா ஒரு விளக்கத் அளித்துள்ளது.
நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் கூறியிருக்கிறது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடக்கு காற்றின் காரணமாக, குளிர்காலத்தில் வழக்கமாக சீனாவில் நுரையீரல் பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கம் என்று பதிலளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, சீனாவில் கரோனா போன்று மற்றொரு பேரிடர் தொடங்கியிருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அவர், இந்த நோய் தாக்கமானது குறைவான பாதிப்பையேக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் பாதிப்பும் தீவிரமும் குறைவுதான். சீன மக்கள் மற்றும் சீனாவில் வாழும் வெளிநாட்டினரின் சுகாதாரத்தை உறுதி செய்வதில், சீன அரசு எப்போதும் கவனம் செலுத்தும். சீனாவுக்கு பயணம் செய்வது இன்னமும் பாதுகாப்பானதுதான் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. எதுவும் அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்றும், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.