
நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்களைக் குற்றவாளிகள்போல நடத்தியதாக அமெரிக்கா மீது பிரேசில் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறிய ஒரு கோடிக்கும் மேற்பட்டோரில் 538 பேரை கைது செய்ததுடன், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை, அமெரிக்கா நாடு கடத்தியது. இவர்களில் 88 பேர் பிரேசிலுக்கும், 265 குவாத்தமலாக்கும் நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில், நாடு கடத்தப்பட்டவர்களைக் குற்றவாளிகள்போல நடத்தியதாக அமெரிக்கா மீது பிரேசில் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் விமானம் முதலில் பெலோ ஹொரிசோண்ட்டுக்குத்தான் செல்வதாய் இருந்தது; ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மனாஸ் பகுதியில் தரையிறக்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் கூறியது, ``விமானத்தில் குடிக்க தண்ணீர்கூட கொடுக்கவில்லை. கைகளும் கால்களும் கட்டப்பட்டது; கழிப்பறைக்குக்கூட செல்ல அனுமதிக்கவில்லை. விமானத்தின் உள்பகுதியில் சூடாக இருந்ததால், சிலர் மயக்கமடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குளிரூட்டி செயல்படாததால், சிலருக்கு சுவாசப் பிரச்னைகளும் ஏற்பட்டது’’ என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கைவிலங்கால் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட பிரேசில் நீதி அமைச்சர் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார்.
மேலும், இந்த நடவடிக்கையை `மனித உரிமைகளை வெளிப்படையாக புறக்கணிப்பது’ என்று கூறினார். பிரேசில் நாட்டவரை இழிவான முறையில் நடத்தியது குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் அமைச்சகம் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.