மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டத்தில் ஆஸ்திரேலிய செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா!

லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டத்தில் ஆஸ்திரேலிய செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டாவால் காயமடைந்தார்.

News image
Updated On :10 ஜூன் 2025, 10:36 am

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துவரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரித்துக்கு கொண்டிருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்து காயமடைந்தார்.

செய்தியாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், விடியோவில் பதிவாகியிருந்ததும், அவர் வலியைத் தாங்க முடியாமல் துடித்திருப்பதும் மிகப்பெரிய செய்தியை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர சிறைக் கூடத்தின் வாயிலில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி போராடி வந்தபோது, லாரென் டொமாஸி என்ற நைன் நியூஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.

தொலைக்காட்சி கேமரா முன்பு, போராட்டம் எந்த அளவுக்கு தீவிரமடைந்துகொண்டிருக்கிறது என்றும், இங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் காவல்துறையினரும், தேசிய பாதுகாப்புப் படையினரும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் மீது எதிர்பாராத விதமாக காவல்துறையினர் சுட்டதில் ரப்பர் தோட்டா பாய்ந்தது. அதில் காயமடைந்த லாரென், வலி தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு சுதாரித்துக்கொண்டு, பரவாயில்லை என சமாளித்தார். இது முழுக்க முழுக்க விடியோவில் பதிவாகியிருந்தது. இதனை உலகம் முழுக்க பலரும் நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிறகு தன்னுடைய எக்ஸ் பதிவில், எனது நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. சற்று வலி இருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை. சொல்ல வேண்டிய கதைகளை நாம் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையையும் அவர் இணைத்திருந்தார். அதில், நைன் நியூஸ் நிறுவனம், தனது செய்தியாளர்களுக்கு பக்கபலமாகவும், அவர்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இருக்கிறது எனவும், லாரென் டொமாஸி ரப்பர் தோட்டாவால் காயமடைந்தார். தற்போது அவரும், கேமரா நிபுணரும் நலமாக இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படையான வேலைகளை செய்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுளள்து.

அனைத்து செய்தியாளர்களும் பாதுகாப்பாக பணியாற்றுமாறு ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரத் துறை அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கித் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஜி7 உச்சி மாநாட்டில், அதிபர் டொனால்ட் டிரம்பிடம், ஆஸ்திரேலிய பிரதமர், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள் என்று முதலில் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவருகிறது. இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதில் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலா்களை தாக்கிய பலா் கைது செய்யப்பட்டனா். அவர்கள் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து தேசிய பாதுகாப்புப்படையினா் போராட்டப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனா். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகை, ரப்பா் குண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.