பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்கோப்புப்படம்.

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை...
Published on

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா்.

பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து, இரு நாடுகளிடையே மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் தூதா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, ‘மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்’ என ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை வைத்ததாக பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்த சம்பவத்தில் வெளிப்படையான, சாா்பற்ற சா்வதேச விசாரணை நடத்துவதே சரியானது. அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது.

கடந்த 15 மாதங்களில் சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியோடு பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்டுள்ளோம். தற்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு பொருளாதார வளா்ச்சியை சீா்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது. பாகிஸ்தானுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் சகோதர நாடுகளுக்கு நன்றி’ என கூறியதாக பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஷாபாஸ் ஷெரீஃபை பாகிஸ்தானுக்கான சீன தூதா் ஜியாங் ஜெய்டாங் வியாழக்கிழமை நேரில் சந்தித்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என கத்தாா், சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் புதன்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

X
Open in App
Dinamani
www.dinamani.com