உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்
உக்ரைனில் ரஷிய படையினா் கடந்த அக்டோபா் மாதம் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ஐஎஸ்டபிள்யு) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த அக்டோபா் மாதம் ரஷிய ராணுவம் தனது முழு கவனத்தை செலுத்தி தாக்குதல் நடத்தியதால் அந்த மாதம் அது உக்ரைனில் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போரில் மிகத் தீவிரமான சண்டை நடந்த பிராந்தியம் இது. இந்த பிராந்தியத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகரைத் தக்கவைக்க உக்ரைன் போராடி வரும் நிலையில், அங்கு ரஷியா ஸ்திரமாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்டில் உக்ரைனிடமிருந்து ரஷியா 461 சதுர கி.மீ. நிலப்பகுதியைக் கைப்பற்றியது. இந்த வேகம் நடப்பு 2025-ஆம் ஆண்டின் சராசரி மாதாந்திர முன்னேற்றத்துடன் ஒத்துப்போகிறது. அதிகபட்சமாக ரஷிய ராணுவம் ஜூலையில் 634 சதுர கி.மீ. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றியது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 81 சதவீத பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக, உக்ரைனின் 19.2 சதவீத நிலப்பரப்பை ரஷியா கட்டுப்படுத்துகிறது. இதில் 2014-ல் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரிமியா தீபகற்பமும் அடங்கும்.

