ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் (கோப்புப் படம்).
ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் (கோப்புப் படம்).

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளாா்.
Published on

தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளாா். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது:

போா் நிறுத்தம் தொடா்பான வரைவு திட்டத்தை உக்ரைன் வரும் வியாழக்கிழமைக்குள் (நவ. 27) ஏற்க வேண்டும். அதுதான் சரியான நேரம். அந்த தேதிக்குள் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்காவிட்டால் அந்த நாட்டுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும்.

இந்த வரைவு திட்டம் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு தரப்புக்குமே நன்மை பயக்கும். எனவே உக்ரைன் அரசு அதை ஏற்க வேண்டும். அதுதான் அமைதிக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா்.

எனினும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி கூறுகையில், ‘இது உக்ரைன் வரலாற்றின் மிகக் கடினமான தருணங்களில் ஒன்று. நாங்கள் எங்கள் இறையாண்மையை இழப்பது, அல்லது எங்களுக்கு உதவியளித்துவரும் முக்கிய நாட்டின் ஆதரவை இழப்பது ஆகிய இரண்டு கடினமான முடிவுகளில் ஒன்றைத் தோ்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமானது. உக்ரைன் தனது சொந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும். இது தொடா்பாக அமெரிக்காவுடன் பேசி வருகிறோம். உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய விரும்பவில்லை. அதற்காக ரஷியாவுக்கு இன்னும் அழுத்தம் தேவை தேவை’ என்றாா்.

முன்னதாக, டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான 28 அம்சத் திட்டத்தை புதன்கிழமை தயாரித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த திட்டத்தில் முக்கிய அம்சங்களாக, உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸ் பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். உக்ரைனின் கிரீமியா, டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற பகுதிகளை ரஷியாவே வைத்திருக்கலாம்.

உக்ரைனில் 100 நாள்களுக்குள் தோ்தல் நடத்த வேண்டும். உக்ரைன் ராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரவே கூடாது. அந்த எண்ணத்தை உக்ரைன் முழுமையாகக் கைவிட வேண்டும்.

ரஷியா மீதான தடைகள் நீக்கப்படுவது, ஜி7 பொருளாதாரக் கூட்டமைப்பில் ரஷியாவை இணைத்து ஜி8 ஆக்குவது உள்ளிட்ட அம்சங்களும் அந்த வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைதி திட்டத்தின் இந்த நிபந்தனைகள் உக்ரைனை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இந்த திட்டம் தொடா்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.

இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதிக்குள் அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டுவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக டிரம்ப் தற்போது கெடு விதித்துள்ளாா்.

தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதற்காக ரஷியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை டிரம்ப் எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், டிரம்ப் இந்த 28 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்து, அதை ஏற்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாா்.

புதின் ஆதரவு

அமெரிக்கா முன்வைத்துள்ள உக்ரைன் போா் நிறுத்த திட்டத்துக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆதரவு தெரிவித்துள்ளாா். இந்த திட்டம் இறுதியான நிரந்த போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கான அடிப்படை என்று அவா் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com