இஸ்ரேல் - ஹமாஸ் இன்று எகிப்தில் பேச்சுவாா்த்தை!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்தாா்.
அந்தத் திட்டத்தின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனா்கள் மற்றும் காஸா மக்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டு அதன் முதல்கட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவாா்த்தை எகிப்து நாட்டில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பாா் என எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஸாவில் 2023, அக். 7-ஆம் தேதி போா் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கிவரும் நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.