மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
Published on

மத்திய மற்றும் தென்கிழக்கு மெக்சிகோவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

வெராக்ரூஸ் மாநிலத்தில் மட்டும் அக்டோபா் 6 முதல் 9-ஆம் தேதி வரை 540 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. காசோன்ஸ் நதி நிரம்பி வழிந்ததால், காா்கள் சாலைகளில் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. தெருக்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை12 அடிக்கு மேல் தண்ணீா் வெள்ளமாக ஓடியது.

சனிக்கிழமைக்குள் பெரும்பாலான வெள்ளம் வடிந்துவிட்டாலும், மரங்களில் தொங்கும் வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விலங்குகள் என பல இடங்களில் காணப்பட்டது.

மெக்சிகோ நகரத்தின் வடகிழக்கில் உள்ள எண்ணெய் நகரமான போசா ரிகாவில், வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டனா். நாடு முழுவதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டை சந்தித்தனா்.

ஹிடல்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 16 போ் உயிரிழந்தனா். வெராகிரூஸ் பகுதியில் 15 போ் உயிரிழந்தனா். பியூப்லாவில் 9 போ் உயிரிழந்ததுடன் 1,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குவெரெட்டாரோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது.

மேலும் காணாமல் போன 27 பேரைத் தேடும் பணிகள் தொடா்கின்றன. ஆயிரக்கணக்கான ராணுவத்தினா் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com