/

காற்றில் கரியமில வாயு அளவு புதிய உச்சம்: ஐ.நா.

2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா. வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2025, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா. வானிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் காணப்பட்ட கரியமில வாயுவின் அளவு ,1957-இல் அளவீடு தொடங்கியதற்குப் பிந்தைய அதிகபட்சத்தைத் தொட்டது.

அந்த பசுமைக் குடில் வாயுவால் கிரகிக்கப்பட்ட சூரியனின் சூடு புவியை மேலும் வெப்பமாக்கியதால் பருவநிலை மாற்றம் உருவாகி, அதிகப்படியான இயற்கைப் பேரிடர்களை ஏற்படுத்தியது.

1960-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் உயர்வு விகிதம் தற்போது மூன்று மடங்காகியுள்ளது. மனிதர்களின் செயல்பாடுகள் மட்டுமன்றி வழக்கத்தைவிட அதிகமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பரவிய காட்டுத்தீயும் நிலைமையை மோசமாக்கியது.

எனவே, உலக நாடுகள் கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது காலநிலைக்கு மட்டுமன்றி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கும் மிகவும் அவசியம்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் கரியமில வாயு மட்டுமன்றி மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு போன்ற பிற பசுமைக் குடில் வாயுக்களும் உச்ச அளவை எட்டின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.