ஷி ஜின்பிங்கின் ‘மைய’த் தலைமையை உறுதிப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி
சீன அதிபா் ஷி ஜின்பிங்கை (72) கட்சியின் மற்றும் சக்திவாய்ந்த ராணுவத்தின் ‘மைய’த் தலைவராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், ராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக அவா் மேற்கொண்ட‘களையெடுப்பு’ நடவடிக்கையை ஆதரித்ததுடன், உள்நாட்டு சந்தையை மேலும் வலுவாக்குவதற்கான புதிய 5 ஆண்டு திட்டத்துக்கும் கட்சி ஒப்புதல் அளித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 370 உறுப்பினா்களைக் கொண்ட முக்கிய அமைப்பான நிா்வாக மன்றம் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடத்திய மாநாட்டுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ராணுவ, பொருளாதார விவகாரங்களில் உறுதியான நிலைப்பாட்டைக் கையாண்டு வரும் ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு அடுத்தபடியாக மூன்று முறை அதிபா் பதவியை ஏற்ற ஒரே தலைவராக உள்ளாா். இந்த நான்கு நாள் கூட்டத்தில், ஷி ஜிங்பிங்கை மையமாகக் கொண்டு கட்சியும் நாடும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

