
நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன. ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 800 பேர் பலியானதாகவும் 2500 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆப்கனுக்கான நிவாரண உதவி குறித்து அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மாவ்லாவி ஆமிர் கான் முட்டாக்கியுடன் இன்று(செப். 1) பேசி அங்குள்ள கள நிலவரத்தை கேட்டறிந்தேன். அப்போது, நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்காக ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தேன்.
1,000 குடும்பங்கள் தங்க ஏதுவாக டெண்ட் கொட்டகைகள் அமைக்க தேவையான பொருல்கள் இந்தியா தரப்பிலிருந்து காபூலுக்கு சென்று சேர்க்கப்பட்டுள்ளன.
15 டன் உணவுப் பொருள்கள் இந்திய தூதரக நடவடிக்கையால் காபூலிலிருந்து குனார் பகுதிக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. நாளைமுதல் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்களும் ஆப்கன் சென்றடையும்.
பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான தருணத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா துணை நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.