
பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து தியான்ஜினுக்கு பிரதமர மோடி சனிக்கிழமை வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உறுப்பினர் அமர்வில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த நிலையில், பயங்கரவாதம் குறித்த வலுவான செய்தியை பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத்தை மனிதகுலம் அனைத்துக்குமான ஒரு சவால் என்று அழைத்த பிரதமர் மோடி, எந்த நாடும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தன்னைப் பாதுகாப்பாகக் கருத முடியாது என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், "பயங்கரவாதத்தில் எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்ட மோடி, கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தின் பாதிப்புகளை சுமந்து வருகிறது. அண்மையில், பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இந்த துயர நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் பேசினார்.
பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த பிரதமர், சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கின்றன. அவ்வாறு, பயங்கரவாதத்தை ஆதரிப்பது நமக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? என்றும் பிரதமரி மோடி கூட்டத்தில் பங்கேற்ற உலக நாட்டுத் தலைவர்கள் முன் கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.