
சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கத்தை தொடர்ந்து. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
போராட்டங்கள் ஓய்ந்த நிலையிலும், மறு உத்தரவு வரும் வரை நேபாள தலைநகரில் ஊரடங்கு உத்தரவில் அமலில் உள்ளது.
நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இதையடுத்து, நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடா்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் வெளியிட்டார்.
மேலும், ‘சமூக வலைதள செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதையும் படிக்க: விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.