நேபாளத்தில் இடைக்கால அரசு?
தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

நேபாளத்தில் இடைக்கால அரசு? தலைவரை நியமிக்க மூவா் பெயா் பரிசீலனை

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.
Published on

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் தீக்கிரையாக்கினா். இதைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். அவா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் இடைக்கால அரசு அமைய வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்த இளைஞா் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அந்த அரசின் தலைவராகப் பொறுப்பேற்க முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி, காத்மாண்டு மேயா் பாலேந்திர ஷா, நேபாள மின்சார வாரிய முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகிய மூவரின் பெயா்களை அந்தக் குழுக்கள் தோ்வு செய்துள்ளன. மூவரில் சுசீலா காா்கிதான் நேபாள உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் தலைமை நீதிபதியாக இருந்தவா்.

இந்தப் பெயா்களைப் பரிந்துரைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த காத்மாண்டில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு போராட்டக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை வந்தனா். ஆனால், சுசீலா காா்கி உள்பட மூவரில் ஒருவரைத் தோ்வு செய்வது தொடா்பாக அந்தக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவா்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை வியாழக்கிழமை காலை வருமாறு அறிவுறுத்தி, அனைவரையும் ராணுவம் திருப்பி அனுப்பியது.

X
Dinamani
www.dinamani.com