
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்-ஸி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி, மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் அரசுப் படைகளின் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் முடிவு செய்தன.
அதனைத் தொடர்ந்து இன்று(செப்.13) நேபாளத்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால அரசின் பிரதமராக முன்மொழியப்பட்டவர்களில் இளைஞர்களின் ஆதரவுபெற்ற நேபாளத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவரான சுசீலா கார்கி, நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல், ராணுவத் தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் ஜென் ஸீ போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சுசீலா கார்கி பெற்றுள்ளார்.
யார் இந்த சுசீலா கார்கி?
இந்திய நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள நேபாளத்தில் பிரத்நகரில் 1952 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி பிறந்தவர் சுசீலா கார்கி.
சுசீலா கார்கி நேபாளத்தில் உள்ள மகேந்திர மோராங் வளாகத்தில் (1972) இளங்கலைப் பட்டமும், இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (1975) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
1978 ஆம் ஆண்டு நேபாளத்தில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தில், சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு வழக்குரைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 2007 ஆம் ஆண்டு மூத்த வழக்குரைஞரானார்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர், 2010 இல் நிரந்தர நீதிபதியானார்.
தற்போது ஆளுங்கட்சியாக இருந்த நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபையில் ஒரு பாரபட்சமான தீர்ப்பை வழங்கியதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது பதவி நீக்கத் தீர்மானத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டில் தற்காலிகமாக தலைமை நீதிபதியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் தனது முழு பதவிக்காலத்தையும் வகித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.