மழை நிலவரம்
மழை நிலவரம்

உலக அழிவுக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறதா? கோர முகம் காட்டும் இயற்கை!

உலக அழிவுக்கு ஒத்திகை பார்க்கப்படுவது போல இயற்கை கோர முகத்தைக் காட்டி வருகிறது.
Published on

அண்மைக் காலமாக உலகம் முழுவதும், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என இயற்கை தன்னுடைய கோர முகத்தை அவ்வப்போது காட்டி வருகிறது.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நேரிட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர், இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது.

ஆனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த நிகழ்வுகளைத் தாண்டி, செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்தமாக உலகின் பல நாடுகளில் கனமழை பதிவாகியிருக்கிறது.

செப். 10ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவுப் பகுதியில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 9 பேர் பலியாகினர். 500 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்யத் தொடங்கிய மழை புதன் வரை நீடித்ததால் வெள்ளம் சூழ்ந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வியாழக்கிழமை பெய்த கனமழை, வெள்ளம், அந்நாட்டு மக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவானதைத் தொடர்ந்து சாலைகள் வெள்ளக்காடானது. அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவையும் மழை விட்டுவைக்கவில்லை. தலைநகர் சிட்னியின் மேற்குப் பகுதியை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. சிட்னியில், கடந்த வியாழக்கிழமை பெய்த 12 செ.மீ. மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 600 இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. சிட்னியை போர்க்களமாக்கிச் சென்றிருக்கிறது மழை.

அடுத்து இத்தாலி நாட்டில் செப்.10ஆம் தேதி புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை கொட்டியது. மக்கள் இதுவரை காணாத வகையில், மழைப் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தாலியைப் பொறுத்தவரை இந்த மழை பாதிப்பு ஆகஸ்ட் 24, 28 - 30 மற்றும் செப்டம்பர் 2ஆம் தேதி போன்று அடுத்தடுத்த நாள்களில் கனமழை பெய்து, வெள்ளம் பாதித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனுடன், டிரினிடாட், டோபாகோ, குரோஷியா, அல்ஜீரியா, பாகிஸ்தான் நாடுகளிலும் செப்டம்பர் 10ஆம் தேதி பலத்த மழை முதல் கனமழை பதிவாகியிருக்கிறது.

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து, பாகிஸ்தானில் பெய்த மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 900 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் மழை பெய்திருக்கிறது. மழை என்றால் சாதாரணம் அல்ல, பலத்த மழையும் அல்ல.. மேக வெடிப்பு போல ஒரே இடத்தில் கொட்டித் தீர்க்கிறது மழை. சென்னையில் கூட அண்மைக் காலமாக பெய்யும் மழை ரசிக்கும் வகையில் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இயற்கை தன்னுடைய கோ முகத்தைக் காட்டத் தொடங்கியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Summary

Nature is showing its fierce face as if it is rehearsing for the destruction of the world.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com