காஸா சிட்டி மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்த பிரம்மாண்ட புகை மண்டலம்
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்த பிரம்மாண்ட புகை மண்டலம்
Published on
Updated on
1 min read

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும் எனவும், நிவாரண உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட மற்ற அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்பட்டவை என இதுவரை கூறிவந்த ராணுவம், தற்போது அங்குள்ள ஜோா்டானிய மருத்துவமனையையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் போரை நிறுத்தும் முயற்சியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த வாரம் மேலும் பல நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட ஆயத்தமாகிவரும் சூழலில், சா்வதேச நாடுகளின் இத்தகைய முயற்சிகளை இஸ்ரேல் அலட்சியம் செய்வதையே ராணுவத்தின் இந்த உத்தரவு காட்டுவதாகக் கூறப்படுகிறது.

காஸா சிட்டியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கி பல நாள்களாகியும் அந்த நகரில் இன்னும் பல்லாயிரக்கணக்கானவா்கள் தங்கியுள்ளனா். ஏற்கெனவே சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் பலத்த சேதமடைந்த அந்த நகரில் தற்போது மக்கள் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில் இஸ்ரேல் அரசு தனது கடுமையான ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வது போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கோ, உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் விரும்பும் இரு தேசத் தீா்வை (இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு இரு தனி நாடுகளாக செயல்படுவது) எட்டுவதற்கோ உள்ள சிறிய வாய்ப்புகளையும் பறித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்குக் கரை, காஸாவை உள்ளிட்ட பகுதிகளை பாலஸ்தீன நாடாக முக்கிய நாடுகள் அறிவிப்பது பெயரளவிலான நடவடிக்கை; கள நிலவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், காஸா போா் பாா்க்கப்படும் விதத்தை அது மாற்றியமைக்கும் என்று நம்பப்படுகிறது.

இருந்தாலும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கும் அறிவிப்புகள் குறித்து இஸ்ரேல் வெளியிட்டுவரும் காட்டமான கருத்துகளும், தங்கள் தாக்குதலின் தீவிரத்தை அந்த நாடு சிறிதும் குறைக்காததும் காஸா போரில் பாலஸ்தீனத்துக்கான தனி நாடு அங்கீகார அறிவிப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தையும் எழுப்புவகதாகக் கூறப்படுகிறது.

65,344-ஆக அதிகரித்த உயிரிழப்புடேய்ா் அல்-பாலா, ஆக. 22: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,344-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதல்களில் 61 போ் உயிரிழந்தனா்.

இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபா் 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,344-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com