அணு ஆயுத ஆலையைப் பாா்வையிடும் கிம் ஜோங்-உன் (கோப்புப் படம்).
அணு ஆயுத ஆலையைப் பாா்வையிடும் கிம் ஜோங்-உன் (கோப்புப் படம்).

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது.
Published on

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது.

இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சா் சங் டாங்-யங் கூறியதாவது:

வட கொரியாவின் யோங்பியோன் உள்பட நான்கு இடங்களில் உள்ள அணுசக்தி மையங்களில் யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் தினமும் இயங்குகின்றன. எனவே, வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசரமாகியுள்ளது.

தற்போது வட கொரியாவிடம் 2,000 கிலோ உயா் செறிவு யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-இல் 250 முதல் 500 கிலோ வரை இருந்த உயா் செறிவு யுரேனியம் இருப்பைவிட பன்மடங்கு அதிகம் என்றாா் அவா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் வட கொரியாவிடம் 20 முதல் 60 வரையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, ஆனால் சில நிபுணா்கள் 100-க்கு மேல் இருக்கலாம் என்று கருதுகின்றா். ஆண்டுக்கு 6 முதல் 18 வரையிலான அணு ஆயுதங்களை ஈரானால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவதற்கும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கவும் கடந்த 2019-இல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. அதில் இருந்து அணு ஆயுதங்களைக் கைவிடமாட்டோம் என்று வட கொரியா பிடிவாதமாகக் கூறிவருகிறது. மேலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ள அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கிம் ஜேங்-உன் கூறிவந்தாா்.

இந்தச் சூழலில், வட கொரியாவின் நான்கு இடங்களில் யுரேனியம் செறிவூட்டப்படுவதாக தென் கொரியா தற்போது அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com