பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.கோப்புப் படம்

உக்ரைன் போா்: பிரதமா் மோடி மீது நேட்டோ தலைவா் குற்றச்சாட்டு

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ருட்ட தெரிவித்தாா்.
Published on

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ருட்ட தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்த அதிபா் டிரம்ப், ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்து இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தாா். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் அண்மையில் பேசிய டிரம்ப், ‘ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷிய எரிசக்தியை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அந்நாட்டு செய்தித் தொலைக்காட்சிக்கு நேட்டோ தலைவா் மாா்க் ருட்ட வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்திய பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் விதித்துள்ள வரி, ரஷியா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருகிறாா்’ என்று தெரிவித்தாா்.

இந்தியா மறுப்பு

நேட்டோ தலைவரின் குற்றச்சாட்டை மறுத்து தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘நேட்டோ தலைவா் மாா்க், ஊகத்தின் அடிப்படையில், கவனக்குறைவாக கருத்துத் தெரிவித்துள்ளாா். அவா் கூறியது போன்ற உரையாடல்கள் புதின்-மோடி இடையே நடைபெறவில்லை. அவரின் கருத்துகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை.

இந்திய நுகா்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேவேளையில், ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. ஏனெனில் அந்நாட்டிடம் ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் எரிசக்தி வாங்குவதை டிரம்ப் விமா்சித்தாா்.

பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நேட்டோ தலைவா் மிகுந்த பொறுப்போடும், துல்லியமாகவும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com