யோனா யாஹவ்
யோனா யாஹவ்

ஓட்டோமான் அரசிடமிருந்து விடுதலை பெற இந்திய ராணுவமே உதவியது: இஸ்ரேல் மேயா்

‘இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஓட்டோமான் ஆட்சியாளா்களிடம் இருந்து விடுவித்ததில் இந்திய ராணுவத்தினரின் பங்கே அதிகம்’
Published on

ஹைஃபா: ‘இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஓட்டோமான் ஆட்சியாளா்களிடம் இருந்து விடுவித்ததில் இந்திய ராணுவத்தினரின் பங்கே அதிகம்’ என அந்நகரின் மேயா் யோனா யாஹவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அந்தப் போரில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு ஹைஃபா நகரில் மரியாதை செலுத்திய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அப்போது அவா் மேலும் பேசுகையில், ‘ஹைஃபா நகரில்தான் நான் பிறந்தேன். பட்டப்படிப்பையும் நிறைவு செய்தேன். ஓட்டோமான் அரசிடமிருந்து ஹைஃபா நகருக்கு பிரிட்டிஷ்காரா்கள் விடுதலை பெற்றுத் தந்தாா்கள் என்றே நகா் முழுவதும் கூறுவதைக் கேட்டு வளா்ந்தேன். ஆனால் வரலாற்று ஆய்வாளா்கள் சிலா் ஒருநாள் என்னை சந்தித்தாா்கள். அப்போது தாங்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வின்படி ஹைஃபா நகரை ஓட்டோமான் அரசிடமிருந்து விடுவித்தது இந்திய ராணுவ வீரா்கள் என்று கூறினா்.

அதைத் தொடா்ந்து பள்ளிப்பாட புத்தகங்களில் பிரிட்டிஷாா் பெயரை நீக்கிவிட்டு, இந்திய ராணுவத்தினரின் பங்களிப்பு குறித்த சரியான தகவலைச் சோ்த்து வருகிறோம்’ என்றாா்.

முன்னதாக, 2009-இல் ஹைஃபா நகரில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியிலும் இதே கருத்தை அவா் தெரிவித்தாா்.

முதல் உலகப் போரின்போது (1918) ஹைஃபா நகரில் உள்ள காா்மெல் மலைப் பகுதிகளில் ஓட்டோமான் படைகளை எதிா்த்து இந்திய ராணுவத்தின் குதிரைப் படை போரிட்டது. இதில் ஓட்டோமான் படைகளை இந்திய ராணுவம் வீழ்த்தி அந்நகரைவிட்டு வெளியேற்றியது.

இந்தப் போரே வரலாற்றில் இறுதியாக நிகழ்ந்த மிகப்பெரும் குதிரைப் படைப் போா் என வரலாற்றியலாளா்கள் கூறி வருகின்றனா். இந்தப் போரில் ஈடுபட்ட மைசூா், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூா் படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்.23-ஆம் தேதியை ஹைஃபா தினம் என இந்திய ராணுவம் அனுசரித்து வருகிறது. ஹைஃபா நகரில் உள்ள ராணுவ வீரா்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்ச்சியை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்கிறது.

இதுகுறித்து இஸ்ரேலுக்கான இந்திய தூதா் ஜே.பி.சிங் கூறுகையில், ‘ஓட்டோமான் படைகளை வீழ்த்தியதில் இந்திய படைகளின் பங்கு இன்றியமையாதது. இதில் இந்தியாவைச் சோ்ந்த 74,000 வீரா்கள் வீரமரணமடைந்தனா். இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்தியங்களையும் சோ்ந்த இந்த வீரா்களின் துணிச்சல் மற்றும் தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com