பிரதிப் படம்
பிரதிப் படம்

லிபிய கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் உள்பட 53 அகதிகள் மாயம்

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா்.
Published on

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா்.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில் இருந்தனா். கரையை விட்டுப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகு கடலில் மூழ்கியதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கோர விபத்தில் நைஜீரியாவைச் சோ்ந்த 2 பெண்கள் மட்டுமே உயிா் பிழைத்துள்ளனா். அதில் ஒரு பெண் தனது கணவரையும், மற்றொரு பெண் தனது இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்துள்ளாா்.

கடந்த 2011-இல் முயம்மா் கடாஃபியின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்குக் குடியேற லிபியா ஒரு முக்கியமான போக்குவரத்து இடமாக மாறியுள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 484-ஆக அதிகரித்துள்ளது. சட்டவிரோத ஆள் கடத்தல் கும்பல்கள் லாபத்துக்காக, பாதுகாப்பற்ற ரப்பா் படகுகளில் அதிகப்படியான மக்களை ஏற்றிச் செல்வதே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

லிபியாவில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல்கள், அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், கடலில் மீட்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்படும் அகதிகள், அங்குள்ள முகாம்களில் சித்ரவதைக்கும், மனிதநேயமற்ற கொடுமைகளுக்கும் ஆளாவதாக மனித உரிமை ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com