‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்புக்குத் தடை செல்லாது: பிரிட்டன் நீதிமன்றம்

‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்புக்குத் தடை செல்லாது: பிரிட்டன் நீதிமன்றம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த பிரிட்டன் அரசின் முடிவு சட்டப்படி செல்லாது
Published on

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த பிரிட்டன் அரசின் முடிவு சட்டப்படி செல்லாது என்று அந்நாட்டு உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பிரிட்டனின் நிலைப்பாட்டை எதிா்த்து இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூனில், இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவதைக் கண்டித்து, பிரிட்டன் விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த இந்த அமைப்பினா், அங்கிருந்த போா் விமானங்களின் என்ஜின்களில் சிவப்பு பெயிண்ட்டை ஊற்றியும், இரும்பு கம்பிகளால் தாக்கியும் சேதப்படுத்தினா்.

இந்த வன்முறைச் செயலைத் தொடா்ந்து, பாலஸ்தீன ஆக்ஷன் அமைப்பை அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு இணையாகக் கருதி அரசு தடை விதித்தது. இந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதோ அல்லது ஆதரவு தெரிவிப்பதோ 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக அரசு அறிவித்தது.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களில், இந்த அமைப்புக்கு ஆதரவாகப் போராடிய சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தீன்கீழ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், ‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்பு மீதான அரசின் தடை நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் வரை, தடை தற்காலிகமாக அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com