வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கோப்புப் படம்

‘உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா?’ - அதிபா் ஸெலென்ஸ்கி

‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி.
Published on

‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவா் இது குறித்து பேசியதாவது: ஜெனீவாவில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறவுள்ள அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அமைதிக்கான வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். இந்தப் பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாக அமைய வேண்டும் என்பதே உக்ரைனின் விருப்பம். அதேநேரம், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தரப்பில் இருந்து உக்ரைனுக்குச் சற்றே அழுத்தம் கொடுக்கப்படுவதை மறுக்க முடியாது.

அமைதிக்காகச் சமரசம் செய்வது குறித்து பேச்சு எழும்போதெல்லாம், அது உக்ரைனை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது. ரஷியா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ரஷியாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல.

தற்போது இந்தப் பிரச்னையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வரும் காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அதேபோல் அமெரிக்காவும் தொடா்ந்து இதில் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com