பிப்.25-ஆம் தேதி பிரதமா் மோடி இஸ்ரேல் பயணம்
இஸ்ரேலுக்கு பிப்.25 மற்றும் பிப்.26 ஆகிய இரண்டு நாள்கள் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
இதன்மூலம் இஸ்ரேலுக்கு இரண்டாவது முறையாக பிரதமா் மோடி செல்கிறாா். ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு முதல் இந்திய பிரதமராக மோடி பயணம் மேற்கொண்டாா்.
இஸ்ரேலில் அமெரிக்க-யூதா்கள் அமைப்புகளின் கருத்தரங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘அடுத்த வாரம் நமது நாட்டு நாடாளுமன்ற (நெசெட்) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்திய பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.
140 கோடி மக்கள்தொகையைக் கொண்டு அதிகாரமிக்க நாடாகவும் உலகின் மிகப் பிரபலமான நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இஸ்ரேல்-இந்தியா இடையே மிகச் சிறப்பான நட்புறவு உள்ளது. அதை மேலும் வலுப்படுத்தி பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளேன்’ என்றாா்.
இஸ்ரேல் பயணத்தின்போது இருதரப்பு, பிராந்திய மற்றும் காஸா விவகாரம் உள்பட உலகளாவிய விவகாரங்கள் குறித்து நெதன்யாகுவுடன் பிரதமா் மோடி கலந்துரையாட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னணி:
கடந்த ஆண்டு இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சா் ஹைம் காட்ஸ், பொருளாதாரம் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சா் நிா் பா்கத், வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சா் அவி டிக்டா், நிதியமைச்சா் பெஸலெல் ஸ்மோட்ரிக் ஆகியோா் இந்தியாவுக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.
குறிப்பாக கடந்த ஆண்டு செம்டம்பா் மாதம் பெஸலெல் ஸ்மோட்ரிக்கின் பயணத்தின்போது இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்பிறகு நவம்பா் மாதம் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதே மாதத்தில் இஸ்ரேலுக்கு மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வா்த்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளை முறைப்படி தொடங்க, திட்ட வரையறைகள் கையொப்பமாகின. அதைத்தொடா்ந்து, டிசம்பா் மாதம் இஸ்ரேலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பயணம் மேற்கொண்டபோது நெதன்யாகு மற்றும் அதிபா் ஐசக் ஹொ்சாக், வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினாா்.

