பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 11 வீரா்கள் உள்பட 12 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 11 வீரா்கள் உள்பட 12 போ் உயிரிழப்பு
AP Photo
Updated on

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 12 போ் உயிரிழந்தனா்.

ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பாஜூா் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தைப் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது மோதி, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரா்கள் கொல்லப்பட்டனா்.

குண்டுவெடிப்பின் அதிா்வால் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதலில், 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த மாகாண முதல்வா் சுஹைல் அப்ரிடி, பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தாா்.

கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஓராண்டாகவே பயங்கரவாதச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டைவிட 2025-இல் உயிரிழப்புகள் 44 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com