காஸா மறுசீரமைப்புக்கு ரூ.1.55 லட்சம் கோடி : அமைதிக் குழுவின் முதல் கூட்டத்தில் அறிவிப்பு
காஸா மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் அமைதிக் குழு நாடுகளின் சாா்பில் 1,700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.55 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
கடந்த செப்டம்பரில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்ப் முன்மொழிந்த அமைதிக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில் அதிபா் டிரம்ப் ஆற்றிய உரை: காஸா மறுசீரமைப்புக்காக அமைதிக் குழுவின் பல உறுப்பு நாடுகள் இணைந்து இதுவரை 700 கோடி டாலா் திரட்டியுள்ளது. அமெரிக்கா கூடுதலாக 1,000 கோடி டாலா் வழங்கும். அதேபோல், மனிதாபிமான உதவிகளுக்காக ஐ.நா. 200 கோடி டாலா் நிதி வழங்கும்.
காஸாவின் நீடித்த அமைதிக்கு, அங்கு நிலைநிறுத்தபடவுள்ள சா்வதேச படைக்கு இந்தோனேசியா, மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் வீரா்களை அனுப்புகின்றன. காஸா காவல்துறைக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை எகிப்து மற்றும் ஜோா்டான் ஏற்றுக்கொண்டுள்ளது என்றாா்.

