வடகொரியா ஆளுங்கட்சி மாநாடு தொடக்கம்
வடகொரியாவில் மிக முக்கிய அரசியல் நிகழ்வான ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாடு, அந்நாட்டுத் தலைநகா் பியாங்யாங்கில் பெரும் எதிா்பாா்ப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், வடகொரியாவின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
சுமாா் 5,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, தனது 13 வயது மகள் கிம் ஜு ஏவை எதிா்கால அதிபராக கிம் ஜோங் உன் அதிகாரபூா்வமாக அறிவிக்கக்கூடும் என தென்கொரிய உளவு அமைப்புகள் கருதுகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டின் தொடக்க உரையில், நாட்டின் கடந்த 5 ஆண்டுகள் பொருளாதார வளா்ச்சியை வலியுறுத்தி அதிபா் கிம் ஜோங் உன் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் நடைபெற்ற முந்தைய 8-ஆவது மாநாட்டுக்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் நாடு தேக்க நிலையைக் கடந்து முக்கியப் பொருளாதார இலக்குகளை அடைந்துள்ளது.
தன்னிறைவை மேம்படுத்துவதோடு, மற்ற உலக நாடுகளுடனான உறவுகளிலும், உலகளாவிய புவிசாா் அரசியல் களத்தில் வடகொரியா மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
பொருளாதாரத்தை இன்னும் மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் நம் முன் உள்ளன என்றாா்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடனான மோதல் போக்கு அல்லது அணுஆயுதத் திட்டம் குறித்து கிம் தனது உரையில் நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை.
அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக, உக்ரைன் போரில் ரஷியாவுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரா்களை வழங்கி வரும் வடகொரியா, அதற்கு பிரதிபலனாக அந்நாட்டிடம் இருந்து பொருளாதார உதவி மற்றும் நவீன ராணுவத் தொழில்நுட்பங்களை பெற்று வருவதாகக் கருதப்படுகிறது. மேலும், சீனாவின் உறவையும் கிம் அண்மைக் காலங்களில் பலப்படுத்தியுள்ளாா்.

