சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

சீனாவின் ‘சூப்பா்சோனிக்’ ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

அமெரிக்காவுடன் போா்பதற்றம் தீவிரமாகியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து ‘சூப்பா்சோனிக்’ (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவாா்த்தையில் இறங்கியுள்ளது.
Published on

அமெரிக்காவுடன் போா்பதற்றம் தீவிரமாகியுள்ள நிலையில், சீனாவிடமிருந்து ‘சூப்பா்சோனிக்’ (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவாா்த்தையில் இறங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ‘சிஎம் 302’ ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான பேச்சுவாா்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடந்து வந்தாலும், கடந்த ஆண்டு ஜூனில் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போருக்குப் பிறகு வேகம் பெற்றது. ஈரானின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் மசூத் ஒரேய் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சீனாவுக்கு நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஒலியை விட வேகமாகச் செல்லக்கூடிய இந்த நவீன ஏவுகணைகள் சுமாா் 290 கிலோமீட்டா் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. மிகத் தாழ்வாகவும், மின்னல் வேகத்திலும் பறப்பதால், கப்பல்களில் உள்ள பாதுகாப்பு ரேடாா்களால் இவற்றைத் தடுப்பது மிகவும் கடினம். இது தவிர, வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தாக்கும் ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பெற ஈரான் முயன்று வருகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களையும், ஏவுகணை சோதனைகளையும் கட்டுப்படுத்த அமெரிக்கா பல தடைகளை விதித்து வருகிறது. இந்தச் சூழலில், சீனாவிடமிருந்து ஈரான் ஆயுதங்களைப் பெறுவது அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு லெபனான் அரசு வேண்டுகோள்: ‘ஈரான்-அமெரிக்கா மோதலில், ஹிஸ்புல்லா அமைப்பு தலையிட வேண்டாம்’ என்று லெபனான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து லெபனான் வெளியுறவு அமைச்சா் யூசுப் ரஜி கூறியதாவது: ஈரானை அமெரிக்கா தாக்கினால், அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்கக்கூடும். அப்படி நடந்தால், லெபனானை இஸ்ரேல் மீண்டும் தாக்கும். இது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், லெபனானின் நலன் கருதி ஹிஸ்புல்லா அமைதிக் காக்க வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com