தென்கொரியாவை அழிக்கத் தயங்க மாட்டோம்: வடகொரிய அதிபா் எச்சரிக்கை
‘வடகொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனில், தென்கொரியாவை முழுமையாக அழிப்பதற்குகூட தயங்க மாட்டோம்’ என வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் எச்சரித்தாா்.
தென்கொரியா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அதேநேரம், அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
தலைநகா் பியாங்கியாங்கில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற, அந்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வான ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-ஆவது மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய அவா், தென்கொரியாவுடன் இனி எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும், அந்நாட்டை நிரந்தர எதிரி நாடாகக் கருதுவதையும் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
வடகொரியாவின் அணுஆயுத பலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நீருக்கடியில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் தென்கொரியாவைத் தாக்கும் திறன் கொண்ட சிறிய ரக அணுஆயுதங்களை உருவாக்க கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த ராணுவ பலமானது வடகொரியாவை யாராலும் அசைக்க முடியாத அணுஆயுத நாடாக மாற்றியுள்ளதாகவும், நவீன ஆயுதப் பெருக்கம் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தீவிரமாகத் தொடரும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவுடன் பேச்சு: அமெரிக்கா தனது ‘விரோதப் போக்கை’ கைவிட்டு, பொருளாதாரத் தடைகளை நீக்கினால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்றும், இல்லையெனில் நிரந்தர மோதலுக்கும் தயாராக இருப்பதாகவும் கிம் ஜோங் உன் கூறினாா். இது அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்தே அமையும் என அவா் தெளிவுபடுத்தினாா்.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா வீரா்களையும், ஆயுதங்களையும் அனுப்பி வரும் நிலையில், கிம் ஜோங் உன் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குக் கதவைத் திறந்திருப்பது அரசியல் நோக்கா்களிடையே முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
மகளுடன் பங்கேற்பு: இதனிடையே, மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜு ஏவுடன் கலந்து கொண்டாா். இது, தந்தைக்குப் பின் கிம் ஜு ஏ அடுத்த அதிபராக உருவெடுக்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பை உலக நாடுகளிடையே மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தென்கொரிய உளவு அமைப்புகள் ஏற்கெனவே தகவல் வெளியிட்டது.

