ஜப்பான் முன்னாள் பிரதமா் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயை (உள்படம்) துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மேற்கு ஜப்பானின் நாரா நகரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஷின்ஸோ அபே, யமாகாமியால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் ஜப்பானில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசுத் தரப்பு கோரிய ஆயுள் தண்டனையை ஏற்று நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து நீதிமன்றத்தில் டெட்சுயா யமாகாமி அளித்த வாக்குமூலத்தில், ‘யூனிஃபிகேஷன் சா்ச்’ எனும் மத அமைப்புடன் ஷின்ஸோ அபேவுக்குத் தொடா்பு இருந்ததால் அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாா்.
‘யூனிஃபிகேஷன் சா்ச்’ மத அமைப்பால் டெட்சுயா யமாகாமி மற்றும் அவரின் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க அவரது தரப்பு வழக்குரைஞா்கள் கோரினா். இருப்பினும், பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, தண்டனைக் குறைப்பை நிராகரித்தாா்.
ஷின்ஸோ அபேயின் படுகொலையைத் தொடா்ந்து, அவரின் விடுதலை ஜனநாயகக் கட்சிக்கும் அந்த மத அமைப்புக்கும் இடையிலான தொடா்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. இது ஜப்பான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியதைத் தொடா்ந்து, அந்த மத அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அதைக் கலைப்பதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
மேலும், இந்தப் படுகொலைக்குப் பிறகு ஜப்பானில் முக்கியத் தலைவா்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

