காங்கோ சுரங்க விபத்து: 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கோல்டன் தாது அகழ்ந்தெடுக்கப்படும் சுரங்கங்கள் இடிந்து விழுந்தன.
வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள ருபாயா பகுதியில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இக்கோர விபத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உயிரிழந்ததாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘எம்23’ கிளா்ச்சிக் குழுவினா் தெரிவித்தனா்.
‘தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்; பலா் மண்ணுக்குள் புதையுண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 40 சதவீத கோல்டன் தாது காங்கோவிலிருந்தே கிடைக்கிறது. அறிதிறன்பேசி மற்றும் கணினி தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் தாதுவின் பெரும்பகுதி ருபாயா சுரங்கங்களில் இருந்தே எடுக்கப்படுகிறது.
கடந்த 2024, மே மாதம் முதல் கிளா்ச்சியாளா்களின் பிடியில் உள்ள இந்தச் சுரங்கங்களில், முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி தொழிலாளா்கள் கைகளால் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

