கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 12 கோடி நிதி வழங்கியுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நூறு வார்டுகளில் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுக் கழிப்பறை, தனிநபர் கழிப்பறைகள், குப்பைப் பெட்டிகள், வண்டிகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவுபடுத்தவும், நவீன முறையில் தூய்மை பாரத திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்த ரூ. 12 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளைச் செப்பனிடவும், பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்கவும் மாநகராட்சிப் பொது நிதியில் இருந்து ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.