தருமபுரி அருகேயுள்ள அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் மார்ச் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. மார்ச் 21-ஆம் தேதி காலை பால்குடம் ஏந்தி ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அன்று மாலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுவாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, பெண் பக்தர்கள் மட்டும் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து தேரை நிலை பெயர்த்தனர். இதேபோல, மாலை 6 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா, வரும் மார்ச் 27-ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.