தருமபுரி பேருந்து நிலைய நுழைவு வாயிலில், ராஜகோபால், தியாகி தீர்த்தகிரியார் ஆகியோரது சிலைகளை அமைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் (மேற்கு) ப.சண்முகம் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் பெ.சாந்தமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் அரசாங்கம், முன்னாள் எம்.பி.பாரிமோகன், மாவட்ட அமைப்புச் செயலர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுப்பட்டதோடு, தன்னுடைய சொந்த நிலத்தையே பேருந்து நிலையம் மற்றும் பூங்கா அமைக்க தானம் செய்த பி.ஆர்.ராஜகோபால்கவுண்டர் மற்றும் தியாகி தீர்த்தகிரி முதலியார் ஆகியோரது நினைவை போற்றும் வகையில், இருவரது உருவ வெண்கலச் சிலைகளை, தருமபுரி பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமைக்க வேண்டும்.
பென்னாகரம் அருகே ஏரியூரில் மது அருந்தி நால்வர் உயிரிழந்துள்ளனர். இனி வருங்காலங்களில் இது போன்ற, சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.