தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் அருகே அளேபுரத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் உள்ளது. இத் திருக்கோயிலில் கடந்த 22-ஆம் தேதி திருத்தேரோட்டம் மற்றும் பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டன. மேலும், சிம்ம வாகனம், கஜ வாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளிய திருத்தேரை அளேபுரம், பென்னாகரம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இத் திருக்கோயிலில் 42 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது தேரோட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.