பழனி, ஆக. 7: பழனி பழனியாண்டவர் கல்லூரியில் கணினித் துறை பேரவை துவக்க விழா, விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு, மல்டி மீடியா, விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.
மதுரை தியாகராஜா ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் உதவிப் பேராசிரியர் செந்தில் இமேஜ் பிராசசிங் என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் பல்கலைக்கழக அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. ஜூலை மாதம் கொடைக்கானல் கிருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற சுற்றுலாத் துறை மூன்றாமாண்டு மாணவர் முகமது ரபீக், காமராசர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிக்குத் தேர்வான மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவர் அப்துல்முனாப், பல்கலைக்கழக அளவில் சி மண்டல அளவில் நடைபெற்ற கோகோ போட்டியில் சுற்றுலாத் துறை மாணவர் சிவா தலைமையில் பங்கேற்று நான்காம் இடம் பெற்ற அணியினர், கபாடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், மாவட்ட சிலம்பாட்ட அணியில் முதலிடம் பெற்ற வீரர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2010-11ம் ஆண்டிற்கான மதுரை பல்கலை அளவிலான சி மண்டலப் போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரபாகரன் சேர்மனாகவும், உடற்கல்வி இயக்குநர் பங்காருசாமி பொறுப்பாளராகவும் தொடர்ந்து 3-ம் ஆண்டாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிகளில் பழனிக் கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.