காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் மகா ஆரத்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், குத்தாலத்தில் செப். 12 -ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் தீர்த்தவாரி உத்ஸவம், மகாஆரத்தி, கூட்டுப்பிரார்த்தனை, லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம், பாராயணங்கள் ஆகியவை நடைபெறுகிறது.
இதையொட்டி, மகா புஷ்கர விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை தீர்த்தப்படித்துறையில் வேத ஆகம முறைப்படி மகா சங்கல்பத்துடன் உத்ஸவம் தொடங்கியது. முன்னதாக, 12 கலசங்கள் ஆவாகனம் செய்யப்பட்டு, காவிரி பூஜை, ருத்ர பூஜை ஆகியவை செய்யப்பட்டு பக்தர்களின் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மகா ஆரத்தி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகா ஆரத்தியை திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சார்யார் நடத்தி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை புஷ்கர கமிட்டிச் செயலாளர் முரளி மற்றும் குஞ்சு, குமார், மகாலிங்கம் உள்ளிட்ட காவிரி மகா புஷ்கரம் விழா கமிட்டியினரும், ஸ்ரீ வெங்கடாஜலபதி சேவா சமிதியினரும் செய்திருந்தனர்.