நாகை மாவட்டம், குத்தாலத்தில் காவிரி தீர்த்தப் படித்துறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி, ஆரத்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் காவிரி தீர்த்தப் படித்துறையில் செப். 12 -இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, தீர்த்தவாரி உத்ஸவம், மகா ஆரத்தி, கூட்டுப்பிரார்த்தனை, லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்ய பிரபந்தம், பாராயணங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மகா ஆரத்தி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மகா ஆரத்தியை திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியார் நடத்தி
வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை புஷ்கரம் விழா கமிட்டி தலைவர் பாண்டியன், செயலர் முரளி, பேரூராட்சி முன்னாள் தலைவர் குஞ்சு மற்றும் குமார், மகாலிங்கம், காவிரி மகா புஷ்கரம் விழா கமிட்டியினர், ஸ்ரீ வெங்கடாஜலபதி சேவா சமிதியினர் செய்திருந்தனர்.