பிரபாஸைத் தவிர வேறு எந்த நடிகரும் பாகுபலி படத்தின்மீது இந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கமாட்டார்கள் என்று இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளார்.
பாகுபலி 2 படத்தின் ஐமேக்ஸ் போஸ்டர் குறித்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பாகுபலியின் மொத்தப் படமும் பிரபாஸ் இன்றி சாத்தியம் இல்லை. தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான அவர், இந்தப் படத்தின்மீது நம்பிக்கை வைத்தார். இதற்காக மூன்றரை ஆண்டுகள் செலவிட்டார். அவரை விடவும் வேறு யாரும் இந்தப் படத்தில் இந்தளவுக்கு ஆர்வத்துடன் பணிபுரிந்திருக்கமுடியாது. பாகுபலி என்கிற ஒரு பெரிய படம் எங்கள் அனைவரையும் இழுத்துக்கொண்டது. எனவே இந்தப் படத்தை விடவும் நான் பெரிய மனிதன் கிடையாது. ஐமேக்ஸில் படம் பார்க்கும்போது என் படமும் இதில் வரவேண்டும் என எண்ணுவேன். பாகுபலி 2-வில் அது சாத்தியமாகியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பு உள்ளதால் அதிக திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியாகவுள்ளது என்றார்.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.