மும்பை: விமானத்தில் நடுவானில் சகபயணி ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக 'தங்கல்' திரைப்படத்தில் நடித்த நடிகை சய்ரா வாசிம் தெரிவித்துள்ளார்.
அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனை கீதா போகத் கதாபாத்திரத்தில் நடித்தவர் சய்ரா வாசிம் (17). ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரான இவர் சனிக்கிழமை இரவு தில்லியிலிருந்து -மும்பை செல்லும் ஏர் விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்பொழுது அவருக்கு பின்னே அமர்ந்திருந்த சகபயணி ஒருவர் தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக சய்ரா வாசிம் தற்பொழுது புகார் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் தன்னுடைய 'இன்ஸ்ட்டாகிராம்' சமூக வலைதள பக்கத்தில் இந்தச் சம்பவத்தை அழுதபடி விவரித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
விமானத்தில் என் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப் பயணி, நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து, தனது கால் விரலால் முன்னிருக்கையில் இருந்த என் கழுத்திலும் பின்புறமும் தொடர்ந்து தொட்டும் இடித்தும் தொந்தரவு செய்தார்.
அவரது புகைப்படத்தினை பதிவு செய்ய முயற்சி செய்தேன்.ஆனால் விமானத்தின் உள்ளே நிலவிய குறைந்த வெளிச்சத்தின் காரணமாக என்னால் பதிவு செய்ய முடியவில்லை. அவரது காலை மட்டும்தான் புகைப்படம் எடுத்துள்ளேன். மெதுவாக செயல்பட்ட ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு கைத்தட்டல்கள்.
இவ்வாறு சய்ரா வாசிம் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏர் விஸ்தாரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.