கடவுளின் அருளால் அருமையான கிறிஸ்துமஸ் தினம் அமைந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. பிறகு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருப்பது போன்ற மற்றொரு படமும் வெளியானது. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சிக்காக அந்த நாட்டுக்குச் சென்ற நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்றார். இந்தக் காட்சியின் வீடியோவும் படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
கடந்த செப்டம்பர் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் இணைந்து நியூயார்க் சென்றார் நயன்தாரா. பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இதுபோன்று ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுவேன் எனக் கனவிலும் நினைத்தது இல்லை. முதலில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் வாழ்க்கையை மிகவும் அழகாக்கி வெளிச்சமாகியுள்ள நயன்தாராவுக்கும் நன்றி எனக் கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:
உங்களுக்கு மேலும் சக்தியும் வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள் நயன்தாரா. கடவுளின் அருளால் அருமையான நாள். நல்ல கிறிஸ்துமஸ் தினம். பீலாபீலா பாடல் வெளியானதற்கு நிறைய அன்பைத் தந்துள்ளீர்கள். அடுத்த பாடல், பாடல் டீசர் போன்ற இன்னும் பல வரவுள்ளன என்று கூறியுள்ளார். இதோடு, நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.