லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா... 2011 ல் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் சீதையாக நடித்திருந்தார். பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி முதல் ராமானந்த் சாகரின் டெலிவிஷன் ராமாயணத்தில் நடித்த தீபிகா சிகாலியா வரை அதுவரை சீதையாக நடித்திருந்த அத்தனை நடிகைகளிலும் நயன் தாரா ஒன்றும் சோடை போகவில்லை. அந்த ஆண்டுக்கான SIIMA விருது விழாவில் ராமராஜ்ஜியம் சீதை கதாபாத்திரத்துக்காகவே நயனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
ஒரு பாடு சீதையாக நடித்து முடித்து விட்டு அத்தோடு தனது திரையுலகப் பயணத்துக்கே முழுக்குப் போடப் போவதாகக் கூட அப்போது நயன்தாரா அறிவித்திருந்தார். ஆனால் விதி வலியது. இந்திய இதிகாசங்களைப் பொறுத்தவரை மெல்லியல்பினலான சீதையைக் காட்டிலும் வலிமையான கதாபாத்திரமாகச் சித்தரிக்கப் பட்டிருப்பது மகாபாரதத்தின் திரெளபதியே! பாஞ்சாலியாக ஐவருக்குப் பத்தினியாக வாழ்ந்த திரெளபதி கதாபாத்திரத்துக்கும் நயன் தான் பொறுத்தமாக இருப்பார் என ஒரு கன்னட இயக்குனர் நினைத்திருக்கிறார். அதன் பலன் தான் ‘குருஷேத்ரா’ கன்னடத் திரைப்படத்தில் திரளபதியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று வந்த செய்தி.
இந்தச் செய்தி இன்னும் அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் சார்பாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஜூலை 23 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சாண்டல்வுட் செய்திகள் கூறுகின்றன.