ஜனதா கரேஜ், புலி முருகனை அடுத்து லாலேட்டன் ரசிகர்களை ஸ்பெஷலாக மகிழ்விக்க இந்த ஆண்டு ஓணம் பண்டிகையன்று வெளிவரவிருக்கிறதாம் மோகன்லாலின் அடுத்த அதிரடி ஆட்டமான ‘வில்லன்’ திரைப்படம். வில்லன் திரைப்படத்தைப் பொறுத்தவரை பீட்டர் ஹெயின் மாஸ்டர் மற்றும் ஸ்டண்ட் சில்வா இருவரது மேற்பார்வையில் ஆக்ஷன் காட்சிகள் மிகப்பிரமாண்டமானதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆக்ஷன் கொரியோகிராபி கலையை நேர்த்தியாகக் கையாள ஆக்ஷன் கொரியோகிராஃபர்களான ராம்- லக்ஷ்மன் மாஸ்டர்கள் வில்லன் படத்துக்காகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர ஆக்ஷன் காட்சிகளை அமைக்க ரவிவர்மாவும் இத்திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக ஸ்பெஷலாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஆக்ஷன் கொரியோகிரபி குறித்து படக்குழு வட்டாரத்தில் பெரிதாகப் பேசப் படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். திரைக்கதை எழுதி இயக்கிக் கொண்டிருப்பது பி.உன்னிகிருஷ்ணன். இப்படத்திற்கான அறிவிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.
80K ரிசொல்யூஸனில் படமாக்கப் படவிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைக் கொண்ட ‘வில்லனில்’ VFX காட்சிகள் நிறைய உண்டாம். எடுத்த வரையில் படத்தை திரையிட்டுப் பார்த்த தயாரிப்பு தரப்புக்கு பரம சந்தோசமாம். மோகன்லாலிடமிருந்து அடுத்தொரு சூப்பர், டூப்பர் ஹிட் படமாக வில்லன் வெளிவரவிருக்கிறது என உற்சாகம் பொங்க நம்பிக்கையுடன் அறிவித்திருக்கிறார் படத்தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ்.
வில்லன் அஃபீஸியல் டீஸர்...
இத்திரைப்படத்தில் மோகன்லால் சர்வீஸில் இருந்து பின்வாங்கிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து மஞ்சு வாரியர், ராசி கன்னா, விஷால், ஹன்ஷிகா மோத்வானி, டோலிவுட்டின் குணச்சித்திர நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவிருப்பதால் மூன்று மொழியைச் சேர்ந்த ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ‘லால் ஸ்பெஷல் ட்ரீட்’ ஆக இருக்கலாம்.