சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில், அவர் எட்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ . இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகர் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நிகரிகா என்பவர் கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பழங்குடியினக் குழு ஒன்றின் தலைவராக விஜய் சேதுபதி நடிப்பதாக முன்பே செய்திகள் வெளியாகியிருந்தது.
தற்பொழுது இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல்பாதி முழுவதும் பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வரும் போது நடக்கும் காட்சிகளால் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல கதையை உருவாக்கியுள்ளார். இதில்தான் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இந்த வேடங்களுக்காக 3 மேக்கப் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்றினை நியமித்துள்ளார்களாம்.