சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்: வாழ்நாளில் காணாத புகழ் குறித்து வையாபுரி உருக்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை காணாத ஒரு புகழை அடைந்துள்ளதாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார்...
சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்: வாழ்நாளில் காணாத புகழ் குறித்து வையாபுரி உருக்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை காணாத ஒரு புகழை அடைந்துள்ளதாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று விருந்தினர்களாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்த விவரங்களை நடிகர் வையாபுரி சகபோட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கிறேன். குடும்பத்தினருடன் திரைப்படத்துக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தேன். குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள மாலுக்குச் சென்றேன். தகவல் தெரிந்து மாலுக்கு வந்த அனைவரும் என்னைச் சுற்றிக்கொண்டார்கள். என்னால் எந்தக் கடைக்கும் செல்லமுடியவில்லை. ஒன்றரை மணி நேரம் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்ளமுடிந்தது. வேறு எதுவும் செய்யமுடியவில்லை. ரசிகர்கள் வருகை அதிகமாகவே, வீட்டுக்குப் போகலாம். இன்னொரு நாள் வந்துகொள்ளலாம் என்று மனைவி சொல்லிவிட்டார். என் வாழ்நாளில் இப்படியொரு புகழையும் ரசிகர்களின் ஆதரவையும் கண்டதில்லை என்று உருக்கமாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com