மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திரக் கலை விழாவில் ரஜினியும் கமலும் சந்தித்து உரையாடினார்கள்.
மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.
நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இதற்காக தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர் நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளார்கள். விஜய். அஜித் ஆகிய இருவர் மட்டும் மலேசியா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரஜினியும் கமலும் கலை விழா அரங்கில் சந்தித்துக்கொண்டார்கள். பிறகு இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். இருவரும் சந்தித்துக்கொண்டபோது அதைப் பார்த்த பலரும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியான பிறகு ரஜினியும் கமலும் முதல்முறையாகச் சந்தித்துள்ளார்கள்.